வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

நவீன இந்தியாவின் சிற்பிகள்

 

ஒருநாள் சூரியனில் இருந்து பூதாகரமாக வெடித்துச் சிதறி வந்தது தானே பூமி? வேண்டாம் என்று சூரியன் ஒதுக்கித் தள்ளியதில் வந்த பூமியில், தங்கமென்றும் வைரமென்றும் வளங்களை கொடுத்தது கடவுளா என்ன? எண்ணம் தான்! நாம் வேண்டாம் என்று குப்பையில் வீசும் பண்டங்கள் கூட, பலருக்கு பிரயோஜனம் ஆவதுபோல, உமிழ்ந்து தள்ளிய பூமியில் தங்கள் வாழ்க்கையை நடத்தவந்த அன்றாடங்காட்சிகள் தானே இந்த மனிதர்கள்! 


யாரும் சூடவில்லை என்றால் என்ன, அரளிச்செடிகள் பூக்கத்தானே செய்கின்றன? மனிதன் தோன்றுவதற்கு முன்பு, பூமியும் அப்படித்தான் ஒருவேளை வாழ்ந்திருக்கும். கடவுள் என்கிற கணவான் ஒருவேளை உயிருள்ளவராக இருந்திருந்தால், இத்தனை கல்நெஞ்சத்தோடு உயிர்வாழ்ந்திருக்க முடியாது. அதனால் தான் என்னவோ கற்களினாலே அவருக்கு சிலை வைத்துவிட்டனர். ஆயிரமாயிரம் தவறுகளை செய்துப் பழகிய பின் மனிதன் அடுத்த முறையும் தவறு செய்யவே விழைகிறான், ஆனால் அதை சரியாக செய்ய முற்படுகிறான். அவை தான் மனிதகுலத்தின் வரலாறாக இன்றுவரை இருக்கிறது. ஏனெனில் உலகம் தோன்றிய காலம் முதல், எந்த ஒரு கொள்கையும் இன்றுவரை அனைவராலும் அரவணைக்கப்பட்டதாக சான்றே இல்லை. 


அதனால் தானே இயேசுவும் அல்லாவும் சிவனும் புத்தனும் பிறந்தார்கள். துறவு, சூபி, ஜென் என எல்லா குருக்களின் மார்கத்திலும் மாயை என்கிற வார்த்தை மாறாமல் இருக்கிறது. அவர்களைப் பொறுத்தவரை எல்லாம் மாயை தான். 


ஒரு நன்கு பழுத்த இலை வந்து விழுகும் வரை, நதி குழப்பம் அடையாமல் தான் ஓடிக்கொண்டிருக்கும். "Rome was not built in a day" என்ற சொலவடையை ஆங்கிலத்தில் மிகப் பிரபலமாக சொல்வார்கள். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உலகம் என்பது சூரியனின் குப்பைத் தொட்டி என்றவர்கள், சிற்சில ஆண்டுகளுக்குப் பிறகு அமைதியான அடர்வனம் என்றனர் ; ஆண்டுகள் கடந்ததும் பூச்சிகளின் புகலிடம் என்றனர்; பின்னர் குரங்களின் கூடாரம் என்றனர்; நாட்கள் சென்ற பிறகு வெறிப்பிடித்த மனிதர்களின் பேராசைப் பந்து என்றனர். 


ஆக காலத்திற்கு ஒரு பதிலைத் தரும் பூமி, என்றைக்குமே நிலையானதாக இருந்ததில்லை. கோசாம்பியின் வார்த்தைகளில் சொன்னால், "பொற்காலம் என்ற ஒன்று என்றைக்குமே இருந்ததல்ல." நேற்று என்பது கடந்தவிட்ட காலம் தான்; இறந்துவிட்ட நேரம் தான். உயிர் பிறந்த உடலை அத்தனை சாத்திரம் செய்து அடக்கம் செய்வது எதிர்காக? எதிர்காலத்திற்காகவா? இறந்தவரின் நிகழ்காலத்தை எண்ணிதானே? அப்படியாகத்தான் நாடு நிலையற்றது என்றாலும், அதன் பழைய நிலைகளை விலையில்லாமல் கட்டிய சில சிற்பிகளை நாம் நினைத்துப் பார்க்க வேண்டியது கட்டாயமாகிறது. இந்தியாவின் ஒவ்வொரு செங்கல்லையும் காலம் மெனக்கெட்டு கட்டியிருக்கும் அந்தச் சிற்பிகள், தேச வரலாற்றில் சில ஆயிரப் பக்கங்களில் என்றென்றைக்குமாக குடியிருக்க உரிமைப்பட்டவர்கள்.


ஒரு நாடு என்பது வெறும் உயிருள்ள மக்களும் மிருகங்களும் அடங்கிய சரணாலயம் அல்ல; உயிரற்ற பிராணிகள் அண்டியுள்ள அருங்காட்சியகமும் அல்ல; மாறாக அது உயிருள்ள, உயிரற்ற அத்தனையுமாக வாழ்ந்து முடிந்த, வாழ்ந்து கொண்டிருக்க, வாழவிருக்க மக்களும் மிருகமும் இயற்கையும் எண்ணமும் அணுவும் நீக்கமற கலந்திருக்கும் ஒரு மந்திரப் பெட்டகம். அது அணு போன்றது, வெறுங்கண்ணால் பார்த்தால் அதில் ஒன்றும் தெரியாது. அதை பார்ப்பதற்கு நமக்கு புத்தகம் என்னும் பூதக்கண்ணாடி தேவைப்படுகிறது. 


"உப்பானது சாரமற்றுப்போனால் அது எதனால் சாரமேற்றப்படும்" என்ற பைபிள் வசனத்திற்கு ஏற்ப ஈடுயினையே அற்ற 19 பேர்களை நவீன இந்தியாவின் சிற்பிகளென அடையாளம் காட்டுகிறார் உலகறிந்த வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா. 


மரப்பாச்சி பொம்மையை கட்டிப்பிடித்து உறங்கும் ஒரு கிராமத்துச் சிறுவனைப் போல, 9 இரவுகள் இந்தப் புத்தகத்தோடு தனிமையைக் கழித்திருக்கும் ஒரு 20 வயது கன்னிப் பையனை என்னென்ன செய்யவேண்டுமோ, அத்தனையும் செய்து அறிவைச் சூறையாடி, இந்திய தேசத்தின் ஆழமானப் புரிதலை ஏற்படுத்தியிருக்கிறது இந்தப் புத்தகம். 


19 நூற்றாண்டிலிருந்து 20 நூற்றாண்டு வரை செல்ல காலரீதியாக பார்த்தால் 100 ஆண்டுகள் போதும். குடும்ப ரீதியாக பார்த்தால் 3 தலைமுறை போதும். கட்டுமான ரீதியாக பார்த்தால், பல்லாயிர சிந்தனையாளர்களின் பலகோடி எண்ணங்கள் வேண்டும். அத்தனையையும் கைக்குள் அடக்கி ருசித்து குடிக்க வேண்டுமா? 


எண்ணத்தோடு நிற்காமல், செயலிலும் புரட்சி செய்தவர்களின் நினைவை பதிவிட மே - 1 விட சிறந்த நாள் வேறில்லை. ஒவ்வொரு இளம் புரட்சியாளனும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம் "நவீன இந்தியாவின் சிற்பிகள்". 

கருத்துகள் இல்லை:

அவ்ளோதான் இந்தியா!

 மக்களை விட கடவுள் பெருசு என்று பேசுகிற நாடுதானே இது? தாழ்த்தப்பட்ட தலீத்தைவிட பூனூல் அணிந்த பிராமணனே பெருசு என்று பீத்துகிற தேசந்தானே இது? ...