என்றைய பொழுதையும் போல இன்றும் 5.30 மணிக்கு எல்லாம் சாவகாசமாக எழுந்து , பல் துலக்கி கிளம்பும் போதெல்லாம், கல்லூரியில் இன்றைய விழாவை சிறப்பாக நடத்திக் காட்ட வேண்டும் என்ற யோசனைகளோடு கழிந்தன.
மேலும் நேற்றைய இரவு படித்த ஒன்றிரண்டு பாடங்களை அசை போட்டப் படி குளித்தும் முடித்தாயிற்று. கடிகாரத்துக்கு என்ன அவசரமோ, கிடுகிடுவென நேரம் ஓடிவிட்டது என எப்போதும் போல இறுதி நேர படபடப்போடு ஆயத்தமாகி வண்டியை இயக்கி வெளிசென்றேன்.
சரியாக இரண்டு நிமிடம் இருந்திருக்கும். கட்டுப்பாட்டை இழப்பது போல் ஒரு உணர்வு. உடனே வண்டியை நிறுத்திவிட்டு பார்த்தால், டயர் பஞ்சர்!!
சரியென்று மனதை தேற்றி கொண்டு அருகில் இருந்த சித்தப்பா வீட்டில் வண்டியை விட்டுவிட்டு, அவரையே பேருந்து நிறுத்தத்தில் இறங்கி விடம்படி பணித்து, ஒரு வழியாக வந்து சேர்ந்தாயிற்று.
அடடே! "காலையில் பேருந்தில் ஐநூறு ரூபாயை நீட்டினால், அவன் கோர முகத்தை அல்லவா நீட்டுவான்" அதனால் நூறு ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுக்கோ என்று அம்மா சொன்னது நினைவில் உறுத்த, சரி பார்த்துக்கலாம்! என்று அவசர அவசரமாக உறுதி பூண்டேன்.
![]() |
| மாதிரிப் படம் |
தாமதம் இல்லாமல், திருப்பூர் - கோவை அதிவிரைவு வண்டி வந்தது. இந்த வழியில் சொகுசு அதிவிரைவு வண்டி, அதுவும் இந்த நேரத்தில் வராதே என்று யோசித்தப் படியே அப்பேருந்து அருகில் வரும்வரை விரைத்துப் பார்த்தேன்.
எனக்கோ நேரம் ஆகிவிட்டது, பராக்கப் பார்த்தப் படி நின்றால், விழா ஏற்பாடுகளை யார் கவனிப்பது என்று ஒருபுறம் கடமை கண்ணன் உதித்து எச்சரித்தார். மறுபுறம், அடடே இது மாற்றுப் பேருந்தாக இருக்குமடா என்று லௌகீக கண்ணன் ஒருபுறம் உந்துதல் கொடுத்தார். மற்றொரு புறமோ, டேய் இதுல கீது ஏறி, அதிகமா பணம் கேட்கப் போறான், ஒழுங்கா அடுத்த பேருந்துல ஏறிக்கோ என்ற பர்ஸ் கண்ணன் பதற வைத்தார்.
சரிரி!! என்ன நடந்தா என்ன! போய் தான் பார்ப்போமே என்று ஏறினேன். செமி - ஸ்லீப்பர் சீட்டுகளை எல்லாஞ் பார்த்த போது பர்ஸ் கண்ணன் தான் நினைவுக்கு வந்தார். நான் நீங்கலாக நான்கு பேரை தவிர வேறு யாருமே இல்லை.
அதனால் இரண்டு மூன்று முறை குறுக்கும் நெடுக்குமாக அலைந்து திரிந்து விட்டு, இலாவகமாக ஒரு சீட்டைப் பிடித்துக் கொண்டேன். புத்தகம் படிக்க ஏற்ற சூழலாக இருந்ததால், நேற்றிரவு 1967-ல் சிறப்பு பேச்சில் பாதியில் நின்ற அண்ணாவை மீண்டும் தொடக்கி வைத்து மாபெரும் தமிழ்க் கனவை புத்தகத்தை கால் மேல் காலிட்டு என்ஜாய்மென்டோடு படித்தேன் என்றாலும், கண்டக்டர் எப்போது வருவார் டிக்கெட் எவ்வளவென்று சொல்வார் என்றே கண் அலைபாய்ந்தது.
ஒருவழியாக, வந்து தீர்ந்தார் 50 ரூபாய் சீட்டை நீட்டினார். நான் எப்போதும் செல்லும் பேருந்தில் 36 ரூபாய். ஆனாலும் நான் அலட்டிக்கொள்ளாமல் இருந்ததற்கு ஒரு காரணம் உண்டு. அந்நூறு ரூபாயில் அய்ம்பது ரூபாய் என்பது கேட்சியான அமௌவுண்ட். அதனால் கண்டெக்கடரின் கண்களில் இருந்து எந்த சலனமும் இல்லை.
சரி இப்படியாக நான்-ஸ்டாப்பாக கோயம்புத்தூர் வந்திருந்தால் நான் ஏன் இந்தக் கட்டுரை எழுதப் போகிறேன். அப்போது நான் எழுதுவதற்கு வேறு ஏதோ ஒரு தூண்டுதல் இருக்கிறது. என்ன அது? ஆம் 50 ரூபாய் பயணத்தில் மொத்தமாகவே நாங்கள் 5 பேரும், இறுதியாக ஒருவரென மொத்தம் 6 பேர் தான் பயணித்தோம்.
ஆக, முந்நூறு ரூபாய் தான் இந்த ட்ரிப்பில் அரசு சம்பாதித்தத் தொகை. முக்கியக் குறிப்பு என்னவென்றால், இடையில் ஒரு டோல் வேறு உள்ளது.
திருப்பூரிலிருத்து கோவைக்கு மொத்தம் 56 கிலோமீட்டர். இதில் எரிபொருளுக்கு செலவான தொகை எவ்வளவு, டிரைவர் - கண்டெக்டர் சம்பாத்தியத்துக்கு எவ்வளவு, டோல் கட்டணம் எவ்வளவு என்று எல்லாத்தையும் ஒட்டுமொத்தமாக கழித்து விட்டு பார்த்தால் அரசு இதில் கண்ட இலாபம் தான் எவ்வளவு?
இதற்கான பதிலை அப்பேருந்தோ சொல்கிறது. உண்மையில் இது கோவை - திருப்பதி அதிவிரைவு வண்டி என்பது அங்கங்கு ஒட்டியிருக்கும் வெங்கடாசலபதி படத்தில் மூலம் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.
என் எல்லாவற்றுக்குமான பதிலை இறுதியில் இப்படி கரியை உமிழ்ந்து கொண்டே சொன்னது அந்தப் பேருந்து " ஏழு குண்டல வாடா வெங்கட்ரமனா கோவிந்தா.. கோ..விந்தா..!"


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக